அரசாணை வெளியிட கோரிக்கை .. மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலை நிறுத்தம்
மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறார்கள்.
சென்னை: மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறார்கள். இதனால் திரையரங்குகள் இயங்காது.
சென்ற ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் சினிமா டிக்கெட் விலை அதிகமாகியது. இதையடுத்து சினிமா பார்க்கும் வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசுக்கும், பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் கடந்த 8 நாட்களாக எந்த புதிய படத்தை வெளியிடவில்லை.
வரிக்குறைப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவும் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது. தமிழக அரசு அதற்குள் அரசாணை பிறப்பிக்காவிட்டால் வேலைநிறுத்தம் நடக்கும் என்றுள்ளனர்.