இரண்டாவது நாளாக தியேட்டர்கள் மூடல்... பரிதாபநிலையில் கோலிவுட் - வீடியோ
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் இரண்டாவது நாளாக ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தியேட்டர் உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திண்டாடுவதால் இரண்டாவது நாளாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் எற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து ஜவுளித்துறை, பட்டாசு தொழிற்சாலை உள்பட பல துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக கேளிக்கை வரி, உள்ளாட்சி வரி என மொத்தமாக 30 சதவீத வரியை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகிறோம் எனக் கூறி கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் நல்ல முடிவு எட்டப்படவில்லை. அதனால் இரண்டாவது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு பெரும் பின்னடைவை தமிழ் சினிமா சந்தித்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தமிழ் சினிமா உலகத்தையே அழிக்கும் என திரைப்படத்துறையினர் மனம் வெதும்பிக் கூறி வருகின்றனர்.