விரைவில் கட்சியில் மாற்றம் நிகழும்... அது, நல்லதாகவே அமையும்: தங்கபாலு சூசகம்
டெல்லி: என்னைத் தனிப்பட்ட முறையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். ஆனால், நானும் லாவணி பாட விரும்பவில்லை. அவருடைய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும், என்னிடம் பதில் உள்ளது என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் தமிழக காங்கிரஸில் மாற்றம் நிகழும், அது நல்லதாகவே அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. தற்போதைய தலைவர் இளங்கோவனை எதிர்த்து, முன்னாள் தலைவர் தங்கபாலு, சிதம்பரம் உள்ளிட்ட தலைவர் கட்சித் தலைமையிடம் நேரில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இளங்கோவன் கூறுகையில், ‘என் நேர்மையை விமர்சிக்கும் தங்கபாலுவுக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்பது குறித்து என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. இது தொடர்பான விவாதத்திற்கு அவர் தயாரா? என பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தங்கபாலு அளித்துள்ள பேட்டியில், "இளங்கோவன், தான் மட்டுமே காங்கிரஸ் என நினைக்கிறார். அதுதான் பிரச்னைக்கு காரணம். இதே நிலைமை நீடித்தால், கட்சி மோசமான நிலைக்கு சென்று விடும்.
தன்னிச்சையாக நடக்க இளங்கோவனுக்கு யார் அனுமதி கொடுத்தது. அவரின் செயல்பாடு தவறு என்பதை சுட்டிக் காட்டினோம். பலரும் அறிவுறுத்தினோம். அவர் திருந்தவில்லை. என் ஆதரவாளர்களை மட்டுமல்ல; பிடிக்காதவர்கள் என பட்டியல் போட்டு, பலருடைய ஆதரவாளர்களையும் பழிவாங்கினார். அதன் பிறகும், எப்படி அமைதியாக இருக்க முடியும். அதனால் தான் எங்கள் எண்ணங்களை தலைமைக்கு சொன்னோம்.
அதற்காக, என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார்; அது அவருடைய இயல்பு. அதற்காக, நானும் லாவணி பாட விரும்பவில்லை. அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும், என்னிடம் பதில் உள்ளது.
மேலிட அனுமதிக்காக காத்திருக்கிறேன். அனுமதி கொடுத்ததும், பதில் சொல்வேன். விரைவில், கட்சியில் மாற்றம் நிகழும்; அது, நல்லதாக அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.