கள்ளை விட மது சிறந்தது என நிரூபிக்கத் தயாரா?.. வைகோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி நல்லசாமி சவால்
ஈரோடு : மதுபானங்கள், கள்ளை விட, சிறந்தவை என்பதை நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நல்லசாமி கூறியதாவது..
சேலத்தில், 7 ம் தேதி, காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி சடங்கு நடந்தது. அஞ்சலி கூட்டத்தில் இரங்கல் உரையாற்றிய, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, "ம.தி.மு.க. ஒருபோதும் கள்ளை ஆதரிக்காது.
பூரண மதுவிலக்கை பற்றி தான் பேச வேண்டும். கள் ஆதரவாளர்கள் வந்திருக்கிறார்கள். கள்ளை பற்றி எவரும் வாய் திறக்க கூடாது' என்றார்.
கடந்த காலங்களில் கள்ளுக்கு ஆதரவாக, ம.தி.மு.க., செயல்பட்டு வந்துள்ளது. அரசு நியமித்த நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு, ஆறு இடங்களில் மக்கள் கருத்துக்களை
கேட்டறிந்தது.
அப்போது, எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்தி, கள்ளுக்கு விதித்து இருக்கும் தடையை நீக்க கோரி, கருத்துக்களை பதிவு செய்துள்ளார். கட்சியினரும் அவ்வாறே கருத்துக்களை பதிவு
செய்துள்ளனர். ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் கள்ளுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கள் இயக்கத்தின் கோரிக்கையில் நியாயமே இல்லை. டாஸ்மாக் மதுவும், வெளிநாட்டு இறக்குமதி மதுவும் கள்ளை விட நல்லவை என்பதை நிரூபித்தால், கோரிக்கைகளை கைவிடுகிறோம்.
போராட்டத்தை விலக்கி கொள்கிறோம்.
இதுகுறித்து, 10 நாட்களுக்குள் வைகோவுடன் விவாதம் நடத்த கள் இயக்கம் விரும்புகிறது. பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம். இவ்வாறு. அவர் கூறினார்.