கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம் - கண்ணீரில் ஊழியர்கள் - தொடரும் அவலம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் கடலூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்: போக்குவரத்து கழகத்தின் விரோத போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்க கோரியும், போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊக்கப்படி என பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை தற்காலிகமாக போக்குவரத்து கழக அதிகாரிகள் சமாதானம் செய்து வந்தனர்.
அதிகாரிகளின் வார்த்தைகள் நம்பி ஏமாற்றமடைந்த ஊழியர் சங்கங்கள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், கோரிக்கைகளை வெற்றிபெற செய்யவும் முடிவெடுத்தன. இதனைத்தொடர்ந்து மாவட்டந்தோறும் மற்றும் மண்டலம் தோறும் போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தின.
முன்னாள் ஊழியர்கள் தவிப்பு
ஓய்வுபெற்ற அரசு நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்டோருக்கு கடந்த ஒரு வருடமாக ஓய்வூதியம் வழங்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை கண்டித்து தான் முதல்முறையாக போக்குவரத்து கழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்நாள் ஊழியர்கள் யாரும் கலந்துக்கொள்ளாத நிலையில், ஆரம்பத்தில் முன்னாள் ஊழியர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர்.
தனியார் பேருந்துகள் அதிகரிப்பு
ஓய்வூதிய தொடர்பான போராட்டங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் பேருந்துகளின் அதிகரிப்பே இதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், விரைவில் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்கையும் வழக்கம்போல அதிகாரிகள் காப்பாற்றாததால் வயதான காலத்தில் தாங்கள் உழைத்த பணத்திற்காக மீண்டும் முதியவர்கள் போராடத்தொடங்கினர்.
நடப்பு ஊழியர்களும் போராட்டம்
முன்னாள் ஊழியர்களின் விவகாரத்தில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகளை பார்த்து அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த இந்நாள் ஊழியர்களும் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துரைத்தனர். தங்களின் கோரிக்கைகள் மதிக்கப்படாததை கண்டு சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மூலமாக தங்களின் எதிர்ப்பையும் அரசுக்கு தெரியப்படுத்தினர்.
அதிகாரிகளும் ஊழியர்களும்
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை சில போக்குவரத்து மண்டலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து தவறான முறையில் தூண்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பகிரங்கமாகவே ஊடகங்களிடம் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் தனியார் பேருந்து அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதற்கும் அதிகாரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன?
போக்குவரத்து கழகம் உண்மையில் நஷ்டத்தில் இயங்குகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என்று தான் பதில் வருகிறது அரசிடமிருந்து. சரியான திட்டமிடல் இல்லாததும், எகிறும் டீசல் விலை, முறைகேடாக கட்சி கூட்டங்கள் மற்றும் அரசு விழாக்களுக்கு பேருந்துகளை இயக்குவது, புதிய பேருந்துகளை வாங்கி குவிப்பு உள்ளிட்டவைகளே இந்த நஷ்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
தலைவிரித்தாடும் லஞ்சம்
போக்குவரத்து கழகத்தில் தலைமை சரியாக இல்லாததால் அனைத்து பிரிவுகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது. பணி நியமனம், பதவி உயர்வு, தேவையானதற்கு பணம் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து பணிக்கும் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.