லோக்சபா தேர்தலில் இந்தியாவுக்கு அல்வா கொடுத்த தமிழ்நாடு
சென்னை: எந்த மாநிலத்துக்காரர் எப்படிப்போனால் நமக்கென்ன.. நம்ம குத்தே தனிக்குத்துதான் என்பதைப்போல அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர் தமிழர்கள். எனவேதான் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னணியில் இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது.
மோடி அலையா அப்படீன்னா?
தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தும், பாஜக, திமுக கூட்டணி அமைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன. ஐந்து முனை போட்டி நிலவியதால் வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோடி காரணமாக தமிழகத்தில் பாஜக அலை வீசுவதாக கூறப்பட்டது.
ஒன்மேன் ஷோ
ஆனால் வாக்கு எண்ணிக்கை டிரெண்டை பார்த்தால் நிலைமை தலைகீழாக உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நேரத்திலிருந்து அதிமுக மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. கன்னியாகுமரி, புதுச்சேரியில் மட்டும் பாஜக கூட்டணி முன்னிலையி்ல இருப்பதாக அவ்வப்போது சிக்னல்கள் வந்து கொண்டுள்ளன.
கூடிய கூட்டம் எங்கே?
ஸ்டாலின் பிரச்சாரத்தால் திமுக 10 இடங்களிலாவது வெல்லக்கூடும் என்று கூறப்பட்டது. அதிமுக ஆதரவு பத்திரிகைகள் கூட திமுக பல இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கடைசி கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கூறின. ஆனால் வடிவேலுவை பார்க்க கூடிய கூட்டம்போல ஸ்டாலின் பிரச்சாரத்தை கேட்க கூட்டம் கூடியதே தவிர அவை வாக்குகளாக மாறவில்லை.
நாங்க உஷாருல்ல..
தமிழகத்தில் எப்போதுமே மாநிலத்தில் யார் ஆளுகிறார்களோ அந்த கட்சிக்குத்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் மோடி அலை, ஸ்டாலின் பிரச்சாரம் போன்றவற்றால் இம்முறை அந்த டிரெண்ட் மாறும் என்றே பலரும் அடித்துக்கூறி வந்தனர். ஆனால் தமிழர்கள் தங்கள் நலனை காப்பாற்றிக்கொள்வதிலும், ஆட்சியிலுள்ளவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பதிலும் எப்போதுமே கவனம் கொடுப்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர்.
என் வழி தனி வழி
இந்தியா முழுவதிலும் பாஜக அபாரமான வகையில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் வழியே தனி வழி என்பதைப்போல இங்கு டிரெண்ட் போய்க்கொண்டுள்ளது. இதில் மேற்கு வங்கத்தையும், கேரளத்தையும் வேண்டுமானால் நாம் துணைக்கு வைத்துக்கொள்ளலாம். ஆக இந்தியாவின் அனைத்து மாநிலத்துக்கும் அல்வா கொடுத்த பெருமை நம்மையே சாரும்.