“குட் நியூஸ்”.. சென்னையில் “இந்த” ஏரியாவில் இருக்கீங்களா? கூலான செய்தி சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னை: மேற்கு சென்னை பகுதியில் இன்று குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும், சென்னையின் பிற பகுதிகள் மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "சென்னையின் கடலுக்கு அருகே உள்ள பகுதிகளில் கடல் காற்று வீசுகிறது. சென்னையின் மேற்கு பகுதிகளான மீனம்பாக்கம், அண்ணா நகர் மேற்கு, அம்பத்தூர், போரூர், முகப்பேர், வளசரவாக்கம், மனப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று குளிர்ச்சியான சூழல் நிலவும்,
தமிழ்நாட்டிலேய்யே வேலூரும் சென்னையும் நேற்றைய தினத்தைபோன்றே அதிக வெப்பத்துடன் இருக்கும். அதேபோல் கேரளா, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி மண்டலத்திலும், பெங்களூருவின் சில பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை வானிலை ஆய்வு மையமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தது. அந்த அறிக்கையில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 31 முதல் ஜூன் 2 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
இன்றும் நாளையும் இலட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.