சென்னையில் மாலையில் மழை பெய்யும்! ... இல்லாவிட்டால் இரவு கண்டிப்பாக பெய்யுமாம்!!
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கர்நாடகத்தில் பெய்த மழையால் பெரும்பாலான அணைகள், நீர் நிலைகள் நிரம்பின. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், சென்னையில் இன்று வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்ய நல்ல வாய்ப்பு
வருங்காலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்தால் மேட்டூர் வரும் நீரின் வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக குறையும். இந்த அளவு மேலும் மேலும் குறைய வாய்ப்புள்ளது. மேற்கு பகுதியிலிருந்து வீசும் காற்று வலுவிழந்ததால் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய நல்ல வாய்ப்புள்ளது.
ஜூலை மாதம்
வெப்பசலனம் காரணமாக கடலூரில் உள்ள பகுதிகளில் நேற்று மழை பெய்தது. வருங்காலங்களில் சென்னையில் வெப்பசலனம் காரணமாக இரவு மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்யும். நேற்றைய தினம் சென்னையில் வெப்பநிலை 38 முதல் 39 டிகிரியாக இருந்தது. ஜூலை மாதத்தில் இது மிகவும் அதிகமான வெப்பமாகும்.
மழை பெய்யும்
கடந்த 2015-ஆம் ஆண்டு 8 நாட்களுக்கு 40 டிகிரி வெப்பநிலை தாண்டியது. ஜூலை அல்லாத மாதத்தில் வெப்பநிலை 35 ஆக இருக்கும். கடல் காற்று வீசுவதால் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் மழை பெய்யும். எல்லா இடங்களிலும் மழை பெய்யும் என்று சொல்ல முடியாது.
தமிழகத்தில் எங்கு மழை
ஒரு பகுதியில் இன்று பெய்யாவிட்டால் அடுத்த நாள் அந்த பகுதியில் பெய்யும். பருவமழையை போல் வெப்பசலன மழை எல்லா இடங்களிலும் பரவலாக பெய்யாது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, திருவாரூர், நாகை, சேலம் மற்றும் நாமக்கல்லில் இன்று மழை பெய்யும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.