"புயல்" சொன்னது நடக்குமா, நடக்காதா.. நம்புவதா, வேண்டாமா??
2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஒரு வருடம் துவங்கி போக போக... அடிவயிற்றில் பயம் வந்து கன்னாபின்னாவென்று தொத்தி கொள்கிறது... அதுவும் வருட இறுதி நெருங்கிவிட்டால் இன்னும் சுத்தம்... மொத்தமாக பீதியில் உறைந்தே போய்விடுகிறோம்! இதற்கு காரணம் நம்மை மிரட்டி சென்ற பல இயற்கை சீற்றங்கள்தான்!
சில ஆண்டுகளாகவே உலக காலநிலை இயல்பாக இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சுனாமிக்கு பிறகு ஒட்டுமொத்தமாகவே இயற்கை தன்மையே மாறி விட்டது. அளவுக்கு அதிகமான வறட்சி, வெயிலின் உக்கிரம், கட்டுக்கடங்காத வெள்ளம், சுழட்டியடிக்கும் சூறாவளி, புரட்டியெடுக்கும் புயல் என எல்லாமே அளவு மீறி, வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு கணக்கில்லாமல் ஆட்களும் பலியாகி வருகிறார்கள்.
சவால் விட்டவர்
இயற்கை மாற்றங்கள் இப்படி நம்மை கிலி கொள்ள செய்கிறது என்றால், பஞ்சாங்கம் படுத்தும்பாடு அதற்கு மேல் உள்ளது. பஞ்சாங்கத்தை வைத்து வானிலையை கணிக்கும் புயல் ராமச்சந்திரன், சொன்னது எங்கே நடந்து விடுமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. புயல் ராமச்சந்திரன் வெறும் பஞ்சாங்கத்தை வைத்து கொண்டு எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் வானிலையை கணிக்க முடியும் என்று ஏற்கனவே சவால் விட்டவர்.
கேரள வெள்ளம்
எதுவானாலும் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணிப்பவர். அதற்கேற்ற மாதிரி இவர் சொன்னது எதுவும் நடக்காமலும் போய்விடவில்லை. முன்கூட்டியே இவர் சொல்பவை நடந்தும் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா வறட்சியிலிருந்து இப்போது புரட்டி எடுத்த கேரள வெள்ளம் வரை அந்தந்த சம்பவங்கள் நடக்கும் முன்பே தன் பஞ்சாங்கத்தால் புட்டு புட்டு வைத்தவர்.
மிரட்டும் ரெட் அலர்ட்
இப்படித்தான் ஆகஸ்ட் மாதம் ஒருநாள், தமிழகம் வெள்ள நீரில் மூழ்க போகிறது என்று சொன்னார். ரெட் அலார்ட் என்பதெல்லாம் நம்ம ஊருக்கு சொல்வது ரொம்ப ரொம்ப அரிது. "அக்டோபர் முடிந்த பிறகு டிசம்பர் வரை தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும்" என்று ஒரு வருடத்திற்கு முன்பு சொன்னார். அதுதான் இனிமேல் பொத்துக் கொண்டு ஊத்தப் போகிறதா தெரியவில்லை.
வெள்ளம் சூழும்
விவசாய நிலங்கள் பெருமளவு அழியும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது, எப்போதான் இந்த மழை நிற்குமோ என இஷ்ட தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என்றும் கூடவே ஒரு பஞ்ச்சும் வைத்துவிட்டு போனார். அதுமட்டுமல்லாமல் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வடகிழக்கு பருவ மழை பெய்து ஏராளமான மாவட்டங்களை வெள்ளம் சூழும் என்று சொன்னார். இது ஒரு பக்கம் புளியை கரைக்கிறது.
பகுத்தறிவா? பஞ்சாங்கமா?
புயல் ராமச்சந்திரன் சொன்னது நடக்குமா நடக்காதா, நம்புவதா, நம்பாமல் இருப்பதா என தெரியவில்லை. பகுத்தறிவு அறிவியலா? பஞ்சாங்க அறிவியலா? எது ஜெயிக்குமோ தெரியாது. ஆனால் எதுவானாலும் முன்னெச்சரிக்கை அறிவிப்பினை உணர்ந்து அதற்கேற்றார்போல தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாத்து கொள்ள மக்கள் முன்வரவேண்டும். கேரளாவை போல இன்னொரு மழை அழிவை நாம் கனவிலும் பார்த்துவிடக்கூடாது!!