வங்கக் கடலில் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்திற்கு வருகிறது மழை
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் வருகிற 18ம் தேதி, அதாவது இன்னும் 3 நாட்களில் மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுகிறது. இது கடலோரம் வரை பரவி வரும் போது மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த பருவமழை காலத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் பெய்கிறது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.
கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. உரை வீச்சில் தெறித்த சொல்.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
வெப்ப சலனம்
வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக மழை பெய்தது. ஆனால் அவை புயலாக மாறியபோதிலும், தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது. இதனால் உருவான, வெப்ப சலனத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு மழை பெய்துள்ளது.
பெருமழைக்கு வாய்ப்பு இல்லை
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. ஆனால், மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை. எனவே, கனமழைக்கு வாய்ப்பில்லை.
மேலடுக்கு சுழற்சி
அதேநேரம், வங்கக்கடலில் வருகிற 18ம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி உள்ளது. இது கடலோரம் வரை பரவி வரும்போது, மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும். எனவே, நவம்பர் 18,19 தேதிகளில் பரவலாக மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை
தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.