காத்திருக்கிறது பூகம்பம்.. தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் வீடுகளில் இந்த வாரம் அதிரடி ஐடி ரெய்டு?
தமிழகத்தின் பல முக்கிய அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் இந்த வாரம் வருமான வரித்துறை சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலர், ராம மோகனராவின் ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த வாரத்தில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டாத பணம், தங்கம் மற்றும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்களை கண்டறிவதற்காக, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர், தமிழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் வீடு அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் லட்சக்கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் நகைகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
ராமமோகன ராவ்
இதில், தமிழகத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் நடத்திய சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்களுடன், ரகசிய டைரி ஒன்றும் கிடைத்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
டைரி குறிப்பு
ராம மோகன ராவின் டைரியில் பல்வேறு முக்கிய புள்ளிகளிடம் அவர் பண பரிமாற்றம் செய்தது தொடர்பான தகவல்கள் வருமானவரித்துறைக்கு கிடைத்து உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ராம மோகனராவின் வீடு, அவருடைய மகன், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதிகாரிகளுக்கு தொடர்பு
இந்த விசாரணையில் அமைச்சர்கள், 12 ஐஏஎஸ், அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ்., வனத்துறை உயர் அதிகாரிகள் இவருடன் நடத்திய பணபரிமாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. தற்போது சொத்து ஆவணங்கள் குறித்த முதல் கட்ட விசாரணை மட்டும் நிறைவடைந்து உள்ளது. இந்த வாரத்தில் அடுத்தகட்ட அதிரடி ரெய்டுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறையிலும் கூட்டம்
கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்றாலும் கூட, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உத்தமர்காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வருமானவரித்துறை ஆணையர்கள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த வாரம்
இந்த வாரத்தில் தமிழகத்தின் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பணம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்வதுடன், ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ரகசியம்
ராம மோகனராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த வாரம் தீவிர சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். சோதனை நடைபெறும் இடம், தேதி, நேரம் செல்லும் அதிகாரிகள் விவரம் போன்ற தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. சோதனைகளை சுமூகமாக முடிக்க, மத்திய அரசின் அனுமதியின் பேரில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.