மக்கள் ஜனாதிபதி கலாம் பிறந்தநாளில் வெள்ளை சட்டை அணிவோம்...! #MakkalEzhuchiDhinam
அப்துல் கலாம் பிறந்தநாளை மக்கள் எழுச்சி தினமாக கொண்டாடும் விதமாக வெள்ளைச் சட்டை அணிந்து கலாம் படத்தை சட்டைப் பையில் வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் புதிய முயற்சியை இளைஞர்கள் முன்
Recommended Video
சென்னை : இளைஞர்களைக் கனவு காணச் சொன்ன மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை மக்கள் எழுச்சி நாளாக கொண்டாட இளைஞர்கள் சில்ர் சமூக வலைதளங்கள் மூலம் முயற்சி எடுத்துள்ளனர்.
இந்தியாவின் பொக்கிஷம், உலக அரங்கில் தமிழை, தமிழரை தலை நிமிரச் செய்த உத்தமர் ஐயா அப்துல் கலாம். பாரத ரத்னா, பார் போற்றும் தலைவர், ஏவுகணை நாயகர், இளைஞர்கள், மற்றும் மாணவர்களின் நம்பிக்கை நாயகர், இந்தியா 2020 வல்லரசு என்ற கனவு திட்டத்தை வகுத்தவர். ராமநாதபுரத்தில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து உலக அளவில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இன்று விண்ணுலகை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.
மாணவர்கள் தான் எதிர்காலம் என்பதை கடைசி வரை சொல்லி வந்தவர், கடைசியில் அந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே உயிரை விட்டார். 80 வயதைக் கடந்தாலும் மனதளவில் சிறு பிள்ளைபோல மாணவர்களுடன் அளவளாவிய அவர் போன்றதொரு எளிமையான தலைவர் இனி கிடைப்பார்களா என்பது அரிதான விஷயம் தான்.
மாணவர்களின் ஊற்றுக்கண்
மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளுக்கான ஊற்றுக்கண்ணாக இருந்த அப்துல் கலாமின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலாமின் வாழ்க்கையையும், வார்த்தையையும் வரலாறாக மட்டுமே நிறுத்திவிடாமல் அதனை தன் வாழ்விலும் கடைபிடிக்கின்றனர் ஏராளமான இளைஞர்கள்.
வல்லரசு கனவை தூண்டியவர்
இளைஞர்கள் மனதில் வல்லரசு கனவை விதைத்ததோடு நம்பிக்கைக்கான விதையையும் தூவிய மாமனிதர். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று சொன்னதற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர்.
புது முயற்சி
அவரின் கனவுகளை சுமந்து கொண்டு தான் இன்றைய மாணவ சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக முகநூலில் இளைஞர்கள் சிலர் எழுச்சி என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளனர். அப்துல் கலாமின் பிறந்தநாளை மக்கள் எழுச்சி தினமாக கொண்டாடும் விதமாக இன்றைய தினம் வெள்ளைச் சட்டை அணிந்து, சட்டைப் பையில் கலாம் புகைப்படத்தை வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்க வேண்டும். அதனை முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கௌரவிப்போம் கலாமை
பிரபலங்கள் பலர் தோன்றி இந்த மக்கள் எழுச்சி நாளுக்கான முக்கியத்துவத்தையும் கூறுகின்றனர். மேலும் #MakkalEzhuchiDhinam என்ற ட்ரென்ட்டையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் கலாம் அவர்களின் படத்தை சட்டைப்பையில் வைத்திருப்பதோடு மட்டுமல்ல அவரின் சிந்தனைகளை புத்தியில் வைத்திருக்கிறோம் என்பதே இந்த முயற்சிக்கான விதை.