மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான்
மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்களால் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் : மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்து மக்கள் பல்வேறு நோய்களுக்கும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நிலக்கரி இறக்குமதி செய்யத் தடைகோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்யவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தொடர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் எங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. விவசாய சங்கங்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதைப்பற்றி தமிழக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. மக்களுக்காகத் தான் அரசு என்பதை அவர்கள் இதுவரை புரிந்து கொள்ளவுமில்லை என்று குறிப்பிட்டார்.
திமுக, காங்கிரஸ் என்ன செய்தது ?
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் காவிரி வாரியத்தை அமைத்துவிடுவார்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இதற்கு முன் ஆட்சியில் இருந்த திமுகவும், காங்கிரஸும் ஏன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தடை விதிக்கும் அரசு
மேலும், அதிகாரத்திலு இருந்த போது பிரச்னைக்குத் தீர்வு காணாமல் இப்போது நடைபயணம், போராட்டம், மறியல் என்று திமுக சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு பெற்றுத் தரவில்லை என்பதால் தான் மாணவர்களும், இயக்கத்தினரும் போராட்ட களத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ மெரினாவில் கூடி போராட்டம் நடத்த தடை விதிக்கிறது.
மிகப்பெரிய அளவில் நடக்கும்
மெரினாவில் போராட மட்டும் அனுமதி கொடுத்தால், உலகமே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம் என்றும், இனியும் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் நாடகம் நடத்துவது சரியல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.