வெள்ளத்தால் வந்த புது சிக்கல்.. நெல்லைக்கு விநியோகமாகும் கலங்கலான குடிநீர்.. மக்கள் பீதி
நெல்லை: நெல்லையி்ல் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதைப் பருக பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய் அபாயமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையஙகோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆத்தூர் வழியாக புன்னைகாயல் சென்று ஆற்றில் கலக்கிறது.
தாமிரபரணி ஆறுதான் நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. வடகிழக்கு பருமழை காலங்களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் அதிக மழை கிடைக்கும். இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏறபட வாய்ப்பு உண்டு.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் அணைகள் நிரம்பி விட்டன. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது. இதில் ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதனால் மூன்று மாவட்டங்களுக்கும் கடந்த நான்கு நாட்களாக குடிநீ்ர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த ஓரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தண்ணீர் செந்நிறமாக இருந்ததால் அதை குடிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதை பருகினால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கடநத சில நாட்களாக பலர் விலை கொடுத்து குடிநீர் கேன்களை வாங்கி பயன்படுத்தி தொடங்கியுள்ளனர்.