தாமிரபரணியில் பாயும் 40000 கனஅடி வெள்ள நீர்... திருநெல்வேலிக்குள் நுழைந்தது - மக்கள் வெளியேற்றம்
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 40000 கனஅடிநீர் வெள்ளம் பாய்ந்து வருவதால் நெல்லை நகரில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்கிறது. கடந்த சில நாட்களாக கொட்டிவரும் கனமழையால் நிரம்பிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 11,596 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிரம்பிய அணைகள்
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பி உள்ளது. இது தவிர சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, நம்பியாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகளும் நிரம்பி உள்ளன. நிரம்பிய அணைகளில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
பாபநாசம் அணை
இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணியில் கடந்த 5 நாட்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஞாயிறன்று இரவு பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை கொட்டியது.
தாமிரபரணியில் வெள்ளம்
மாலையில் பெய்ய தொடங்கிய மழை திங்கட்கிழமை காலை வரை விடிய விடிய கொட்டியது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. சுமார் 11 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, பாபநாசம் தலையணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாபநாசம் மலையில் உள்ள அகஸ்தியர் அருவி, காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அப்பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பொங்கி வரும் தாமிரபரணி
வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி கரையோர மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். பல பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர். ஆற்றின் தாமிரபரணியில் சேர்மாதேவி அருகே கடனா, ராமநதி அணை தண்ணீரும் சேர்ந்து வருவதால் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்லப்பெருக்கு ஏற்பட்டது.
முருகன் கோவில் மூழ்கியது
பாபநாசம் கீழ் அணையில் இருந்து வருகின்ற வெள்ளம், மணிமுத்தாறு அருவியில் இருந்து வருகின்ற வெள்ளம் எல்லாம் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் தைப்பூச மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களை ஆற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. குறுக்குத்துறை கோவிலில் கோபுரம் உள்ளிட்ட முகப்பு பகுதிகள் மட்டுமே வெளியே தெரிந்தது.
தாமிரபரணியில் 40000 கனஅடிநீர்
காலைமுதல் மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே உபரிநீராக தாமிரபரணியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் விநாடிக்கு 40000 கனஅடிநீர் தாமிரபரணியில் பாய்ந்தோடி வருகிறது. வெள்ளம் காரணமாக கரையோர பகுதியை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தீயணைப்பு படையினர் நவீன உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளார்கள். முக்கிய பாலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
மேலப்பாளையம் பாலம் மூழ்கியது
நெல்லை மேலப்பாளையம், டவுணை இணைக்கும் கருப்பந்துறை பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்தது. இதனால் அப்பகுதி வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலப்பாளையம் மற்றும் சந்திப்பு போலீசார் பாலம் பகுதிக்கு வந்து இருபுறமும் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
நகருக்குள் நுழைந்த வெள்ளம்
திருநெல்வேலி மாநகரத்திற்குள் தாமிரபரணி ஆற்று வெள்ளம் புகுந்துள்ளது. நெல்லை சந்திப்பு கைலாசபுரம் இறக்கம், வேடுவர் தெரு உள்ளிட்ட சில பகுதிகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நகருக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
வயல்கள் மூழ்கின
முக்கூடலில் ஊரின் வடப்பகுதியில் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்தில் தெற்கே தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையின் வடப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள கோரங்குளம் பாசன வயல்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் வயல்கள் நீரில் மூழ்கி விட்டன.
அருவிகளில் குளிக்கத் தடை
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அருவிகளில் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் ஆய்வு
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நெல்லை மாவட்டத்தில் கொட்டி வரும் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.