நீதித்துறை ஒதுக்கீடு: பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழிமொழியும் ஜனாதிபதி- வேல்முருகன்
நீதித்துறை பிரதிநிதித்துவம் குறித்த கவலையை பகிர்ந்து தந்தை பெரியாரின் கொள்கையையே குடியரசுத்தலைவரும் வழிமொழிவதாக வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை : நீதித்துறையில் நலிந்த பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று குடியரசித்தலைவர் சொல்லி இருப்பது பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழிமொழியும் செயல் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த தேசிய சட்ட தின மாநாட்டில் குடியரசுத்தலைவர், சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.செளத்ரி, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக்மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இணையமைச்சர் பி.பி.செளத்ரி, 'கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதித்துறை தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'அரசு எந்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளில் குறுக்கிடும்போது மக்கள் பக்கமே நிற்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும்; அதைத்தான் நீதித்துறை செய்கிறது' என்றார். இறுதியாக இதில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.
நீதித்துறையில் நலிந்த மக்கள்
பாரம்பரியமாக நலிவுற்ற பிரிவினராகவே இருந்துவரும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு நீதித்துறையில் உரிய அங்கீகாரம் இல்லை' என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை பேணும் அளவில் இவர்களுக்கு தகுந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:
’ஏற்கவே முடியாத அளவில்’ பிரதிநிதித்துவம்
குடியரசுத்தலைவர் தனது உரையில் பாரம்பரியமாக நலிவுற்ற பிரிவினராகவே இருந்துவரும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை; இது "ஏற்கவே முடியாத அளவுக்கு" எனலாம். நாட்டின் பன்முகத்தன்மையை நீதித்துறையும் பேணும் வகையில் அதில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இடமளிக்க வேண்டும்" என்று பேசினார்.
இந்திய அரசமைப்புச் சட்டம்
மக்களாட்சி, ஜனநாயகம் என்ற அடிப்படையில்தான் நமது அரசமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம் இயற்றும் அமைப்பாக அரசும்; சட்டத்தை அமல்நடத்தும் அமைப்பாக அரசு நிர்வாகமும்; சட்டம் உருவாவதும் அமலாவதும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என்று பார்க்க நீதித்துறையும் இருக்கின்றன.
நீதித்துறையில் மட்டும் தவறு இல்லை
அப்படியிருக்கும்போது, அரசுத் தரப்பில் நீதித்துறையை குறை சொல்வதும், நீதித்துறை அதற்குப் பதில் சொல்வதுமான நிலைமை ஏன் வருகிறது, வந்தது? குடியரசுத்தலைவர் குறிப்பிட்டபடி "ஏற்கவே முடியாத அளவுக்கு நீதித்துறையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மகளிர் ஆகிய நலிந்த பிரிவினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத" இந்த அநீதிக்குக் காரணம் ஆண்ட, ஆளும் அரசுகளே என்பதை யாரும் மறுக்க முடியுமா?
தட்டிக்கேட்கும் நீதித்துறை
நாட்டில் சமூக நீதியே இல்லை என்பதைத்தானே இப்படிப் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டிருக்கிறார் குடியரசுத்தலைவர். அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக சட்டங்களை இயற்றுவதோடு, அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிர்வாகத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடைமுறைப்படுத்தவும் செய்கிறது அரசு. இதனைத் தட்டிக் கேட்கிறது நீதித்துறை.
அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு
அப்படி தட்டிக் கேட்காத நிலையும் ஏற்படலாம்; அதற்கு அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரே பதிலளிக்கிறார்: "சட்டம் நல்லதாக இருக்கலாம்; அதனைக் கையாள்பவரும் அதனைக் கண்காணிப்பவரும்கூட நல்லவர்களாக இருக்க வேண்டுமே?"
மனிதருள் நல்லவர் கெட்டவர் சார்புடையவர் சார்பில்லாதவர் - எப்படி முடிவு செய்வது? யார் முடிவு செய்வது? என்று விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
குடியரசுத்தலைவரே வழிமொழியும் பெரியார்
அதனால்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சொன்னார் தந்தை பெரியார். அதைத் தான் தற்போது நமது குடியரசுத் தலைவரும் வழிமொழிகிறார். இதற்காக குடியரசுத்தலைவருக்கு வாழ்த்து சொல்வதுடன் சமூக நீதியை நிலைநாட்ட வகை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.