பெரியபாண்டியனை கொன்றவர்களை 15 நாளில் பிடிக்க வேண்டும்... வீரலட்சுமி எச்சரிக்கை!
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றவர்களை 15 நாட்களில் பிடிக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை கொன்றவர்களை 15 நாட்களில் ராஜஸ்தான் போலீசார் பிடிக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது கொள்ளை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலைக்கு காரணமானவர்களை 15 நாட்களில் பிடிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் பேசியுள்ள வீரலட்சுமி கூறியுள்ளதாவது : தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடலுக்கு சென்றால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர், ஆந்திராவில் கூலி வேலைக்கு சென்றால் அங்கும் தாக்கப்படுகிறார்கள். தற்போது குற்றவாளியை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கும் மேல் பொறுமை காக்க முடியாது தமிழகத்திற்கு பிழைக்க வந்த ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து சென்றதை பிடிக்கச் சென்ற போது பெரியபாண்டியன் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றவர்களை 15 நாளில் ராஜஸ்தான் போலீசார் பிடிக்க வேண்டும் அப்படி குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் ராஜஸ்தான் மாநிலத்தவருக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று வீரலட்சுமி பேசியுள்ளார்.