நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை- வீரலட்சுமி வார்னிங்
கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாகக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி கெடு விதித்துள்ளார்.
அந்தக் கட்சியின் தலைவர் கி. வீரலட்சுமி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாக கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வருகிறது 28ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சத்யராஜ் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி கன்னட அமைப்புகள் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏப்ரல் 28ம் பாகுபலி 2 திரைப்படம் வெளியிடப்படும் என்று தெரிவித்தன. இதனையடுத்து நடிகர் சத்யராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜின் தமிழர் விரோத கருத்தை கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை போர்க் கொடி தூக்கியுள்ளது.