எளிமையான கேள்விக்கு என்ன அளவுகோல்? நீட் தேர்வு சர்ச்சை பற்றி தமிழிசை அசால்ட் பதில்
தரமான மருத்துவர்களை உருவாக்க நீட் தேர்வு கட்டாயம் தேவை என்றும் எல்லாவற்றையும் குறை சொல்லக் கூடாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு கடினமான கேள்வி கேட்கப்பட்டதாக கூறுவது அடிப்படைஆதாரமற்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவர்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு ஆளாகினர். கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையை கழட்டச் சொல்லி தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வின் போது குஜராத் மாநிலத்தில் சுலபமான கேள்வி கேட்கப்பட்டதாகவும், தமிழக மருத்துவ மாணவர்களுக்கு கடினமான கேள்வி கேட்கப்பட்டதாக சமூகநீதிக்கான மருத்துவ அமைப்பை சேர்ந்த ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுமென்றே மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகள் மீதும் குற்றம் சாட்டப்படுவதாக தெரிவித்தார். தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கிலேயே நீட் தேர்வு நடத்தப்படுவதாகவும், பல மொழிகளில் பாடம் நடத்தும் போது ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு கேள்வி வருவது சகஜமான விஷயம் தான் என்றும் கூறினார்.
தமிழக மாணவர்கள் நிச்சயம் நல்ல முறையில் தேர்வு எழுதியிருப்பார்கள் என நம்புவதாக தெரிவித்த தமிழிசை, நீட் தேர்வு முடிவுகள் வரும் போது அதில் தமிழக மாணவர்கள் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னரே ஏன் அனைவரும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பிதற்றுவதாக கேள்வி எழுப்பினார். நுழைவுத் தேர்வை பொறுத்தவரை எளிமையான கேள்வி என்றெல்லாம் எதுவும் இல்லை என்று கூறிய அவர், எளிமையான கேள்வி என்றால் அதற்கு என்ன குறியீடு என்றும் கேட்டுள்ளார்.