பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது... தமிழிசை ஒரே போடு!
பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது எனவே பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். திமுக, அதிமுக வேட்பாளர்களின் தாரை தப்பட்டை வரவேற்புகளைப் போல தாமரைக் கட்சியிலும் தாரை தப்படை ஊர்வலத்துடன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் படலம் நடைபெற்று வருகிறது.
கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் அவர் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுகவிற்கு வரப்போகும் வாக்குகள் தற்போது உருவாகியிருக்கும் கூட்டணியால் குறையும் என்றார்.
பாஜக வாக்குகளை பிரிக்க
பாஜகவின் தயவில் தான் அதிமுக ஆட்சி நடத்துகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரியாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு இதை விட்டால் வேறு வழியில்லை பாஜகவுக்கு வரும் வாக்குகளை மாற்ற நினைத்து அவர் இவ்வாறு கூறி வருகிறார்.
பாஜகவுடன் இணைந்தால்
ஆனால் மக்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்கள். பாஜக அதிமுகவுடன் இருந்தால் அதிமுக ஊழலே செய்யாது. ஏனெனில் ஊழல் இல்லாத ஒரே கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான்.
|
தமிழகத்திலும் வர வேண்டும்
பாஜக எங்கு சென்றாலும் அங்கு ஊழலற்ற தன்மை இருக்கும். அந்த ஊழலற்ற தன்மை தமிழகத்திற்கும் வரவேண்டும் என்பதால் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.
30 ஆண்டாக வளர்ச்சியில்லை
கடந்த 30 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியுமே காணாத ஆர்கே நகரில் பாஜக வளர்ச்சியை கொண்டு வருவதற்காகவே போட்டியிடுகிறது. எனவே மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் தருவார்கள் என்று நம்புவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.