ரூ.502 கோடி செலுத்த வழியற்ற தமிழக மின் வாரியம்.. கடும் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்!
சென்னை: தேசிய அனல் மின்கழகத்துக்கு (என்டிபிசி), தமிழக மின்வாரியம் ரூ.502 கோடி கட்டணம் செலுத்தாததால், 1066 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் தமிழகம் கடும் மின்வெட்டை சந்தித்து வருகிறது.
சென்னை அருகே உள்ள வல்லூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் இணைந்து கூட்டாக அனல் மின்நிலையம் செயல்படுத்தி வருகின்றன.
இங்கு மொத்தமுள்ள 3 யூனிட்டில் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் இதில் 1,066 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.5.25 என்ற கட்டணத்தில், தமமிழக மின்சார வாரியம் மின்கொள்முதல் செய்து வருகிறது.
பணம் செலுத்தவில்லை
இந்நிலையில், தேசிய அனல் மின்கழகத்துக்கு, தமிழக மின்வாரியம் ரூ.502 கோடி கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் படி, நிலுவைத்தொகையை 60 நாட்கள் வரை வட்டி இல்லாமல் செலுத்தலாம். அதன்பிறகு வட்டியுடன் செலுத்த வேண்டும். இருப்பினும் கடந்த சில மாதங்களாக இந்த தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது தமிழக மின்வாரியம்.
மின்சாரம் நிறுத்தம்
இதையடுத்து, இந்த தொகையை உடனடியாக வழங்காவிட்டால், தமிழகத்துக்கு தரவேண்டிய 1,066 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்படும் என தேசிய அனல் மின்கழகம் விடுத்த எச்சரிக்கையை தமிழக மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை. எனவே நேற்று முதல் 1,066 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தியது தேசிய அனல் மின் கழகம்.
இதனால் தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடையில் மின்வெட்டு
கோடை காலத்தில் மின்தேவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது 1,066 மெகாவாட் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதை சமாளித்து விடுவோம் என்று, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விலை குறைவா இருக்கிறதாம்
அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : என்.டி.பி.சி. நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.502 கோடியில் தற்போது 200 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின்சாரத்தின் விலை சராசரியாக யூனிட் ஒன்றிற்கு ரூ.3.10க்குள் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிக அதிகமாகவே உள்ளது. அனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி முழுமையாக உள்ளது.
மின்வெட்டு ஏன்?
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள மின்சாரம் வெளி சந்தையில் மலிவான விலையில் அதாவது யூனிட் ஒன்றுக்கு ரூ.2.92 முதல் ரூ.3.95 வரை கிடைக்கிறது. வல்லூர் அனல் மின்நிலையத்திலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதினால், குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை முதலில் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், குறைந்த தேவைக்கு அதிகமான மின்சாரம் கிடைப்பதால், தற்போது வல்லூர் மின் நிலையத்திலிருந்து அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய தேவையில்லை. வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் நுகர்வோர்களின் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு தொடருவது ஏன் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
சென்னை நிலை
சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மின்சாரம் போய், வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. வட சென்னைக்கு செல்லும் மின் வழித்தட பழுதுதான் காரணம் என்கிறது மின்சார வாரியம். ஆனால், மின் கொள்முதலில் ஏற்பட்டுள்ள இந்த சுணக்கம் மின் வெட்டுக்கு காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசு இதை மூடி மறைத்து தொழில்நுட்ப கோளாறு என கதை விடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.