'சூரிய சக்தி மின்சார கொள்முதலை நீடித்தால் மின்வாரியத்துக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும்'
சென்னை: சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்று ரூ. 7.01 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்தால் மின்வாரியத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுபினர் நாகல்சாமி எச்சரித்துள்ளார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.அக்ஷய்குமார், உறுப்பினர் ஜி.ராஜகோபால் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:
சூரிய மின்சக்தியை யூனிட்டுக்கு ரூ. 7.01 என்ற விலையில் கொள்முதல் செய்யலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-ஆம் ஆண்டு, செப்டம்பர் 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த விலை நிர்ணயம் 2015, செப்டம்பர் 11 வரை மேற்கொள்ளப்படும் சூரிய மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, சூரிய மின்சக்தி கொள்முதல் மாதிரி ஒப்பந்தத்துக்கு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. கொள்முதல் ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கிய பிறகும் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரிய வளர்ச்சி ஏற்படவில்லை.
கொள்முதல் ஒப்பந்தத்துக்கு, அனுமதி வழங்கிய நாளிலிருந்து 8 மாதங்களே மீதமிருந்தன. இந்த 8 மாதங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்ய வேண்டும்; மின்சக்தி அமைப்புகளை நிறுவ வேண்டும்; அதைச் சோதனை செய்ய வேண்டும்; மின் உற்பத்தியையும் தொடங்க வேண்டும்.
இதன் காரணமாக சூரிய மின் உற்பத்தி வளர்ச்சி பெறாமலேயே போய்விட வாய்ப்புள்ளது.
சூரிய மின் உற்பத்தியாளர்கள் கொள்முதல் ஒப்பந்தம் செய்யவும், அதன்படி, மின் உற்பத்தியைத் தொடங்கவும் ஒரு முழு ஆண்டையும் வழங்கும் விதமாக இந்த உத்தரவை மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றினால் மட்டுமே மின் உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்கும் என கருதுகிறோம்.
இது தொடர்பான உத்தரவை சுற்றுக்கு அனுப்பியபோது, ஆணையத்தின் மற்றொரு உறுப்பினரான நாகல்சாமி அதை ஏற்கவில்லை.
எனினும் பெரும்பான்மை அடிப்படையில், அடுத்த ஓர் ஆண்டுக்கு, அதாவது, 31.03.2016-ஆம் தேதி வரை யூனிட்டுக்கு ரூ. 7.01 என்ற விலையில் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்யலாம் என ஆணையத்தின் உத்தரவு மாற்றப்படுகிறது.
இவ்வாறு அவர்களது உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் எஸ்.நாகல்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தியைக் கொள்முதல் செய்யும் காலக்கெடுவை நீட்டிப்பதால், தமிழகத்துக்கு அடுத்த 25 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.