தஞ்சை சோழ சாம்ராஜ்யமும் அரசியல்வாதிகளின் சென்டிமென்ட் காரணங்களும்
தஞ்சாவூர்: ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1,000-ஆவது ஆண்டு விழா அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த 24, 25 தேதிகளில் நடைபெற்றது.
1,000 பேர் கொண்ட ஜோதி ஓட்டமும், ஆயிரம் வாண வேடிக்கைகளும் தமிழ் உணர்வாளர்களின் முன்னிலையில் படு விமர்சையாக நடத்தப்பட்டன. அரசு நடத்த வேண்டிய விழாவை தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் நடத்தி முடித்தனர்.
இந்த ஆயிரமாவது ஆண்டுவிழாவை அரசு ஏன் நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு, ஆள்பவர்களுக்கு வரும் சென்டிமென்ட் பயம்தான் என்று கூறப்படுகிறது.
பதவி பறிபோகும்
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரமாண்டம், சிற்பம், ஓவியம், கட்டடக்கலை என, பலவற்றில் இதற்கு இணை ஏதுமில்லை.அதேநேரம், இக்கோவிலுக்கு, கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக, மூலவர் பெருவு டையாருக்கு எதிரே உள்ள படி வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட்.
காலம் காலமாக
இங்கு வந்து சென்ற பின், அவர்கள் உயரிய பொறுப்பை, ருசித்ததில்லை. இப்படியொரு சென்டிமென்ட் காலம் காலமாக இருந்து வருகிறது.இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., என, பலரும் அடங்குவர்.
ராஜராஜசோழனும் கருணாநிதிதியும்
1976ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதையொட்டி பெரிய பிரச்சினை எழும்பியது. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தபோது, "நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை" என்று காரணம் கூறியது.
வாராகி சிலை வைக்கலாமா?
அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப் பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள்.
இடிக்கப்பட்ட வாராகி மண்டபம்
புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?" என்று கலைஞர் தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு சொல்லிவிட்டது.
ஆட்சி டிஸ்மிஸ்
இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கலைஞர் அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. "அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் அதாவது 1976 ஜனவரி 31ம் தேதிதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது" என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள்.
தோற்றுப் போன இந்திரா காந்தி
எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போயிற்று. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டது முதல் நிகழ்ச்சி" என்கிறார்கள் ஊர் மக்கள்.
எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி
ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார். அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போதைய இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது. இந்த அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள்" என்கின்றனர். இந்த முக்கிய சம்பவங்களைத் தவிர, தஞ்சை மக்கள் மர்ம சக்திக்கு ஆதாரமாக வேறு சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்கள்.
ராஜராஜன் ஆயிரம்
இந்த மோசமான சென்டிமென்ட்டை உடைக்கிறேன் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த விழாவில், ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் அவ்வளவு பேரும் தற்போது பதவியை இழந்து, கடும் சோகத்தை சந்தித்து வருகின்றனர்.
கொல்லைப்புறமாக வந்த கருணாநிதி
தஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழாவில் பெரிய கோவிலின் உட்புறம், நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 பேர் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை காண, முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மேலே குறிப்பிட்ட பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
ஆ.ராசா, கனிமொழி
அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, பழனி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மறுதினம், 26ம் தேதி நடந்த நிறைவு விழாவில், கனிமொழி, கோ.சி.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கைதும், சிறையும்
சென்டிமென்ட்டை உடைப்பதாக விழா நடத்தியவர்களுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே பெரியகோவில் சென்டிமென்ட் வேலை செய்ய ஆரம்பித்தது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி இழந்ததோடு, சிறைக்கும் சென்றார்; கனிமொழியும் சிறை சென்றார்.
தோல்வி மேல் தோல்வி
அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. கோ.சி.மணி நோய்வாய்பட்டு, உடல்நிலை மோசமடைந்தார். பழனி மாணிக்கமும் பதவி இழந்து, மாவட்ட செயலர் பொறுப்பையும் இழந்திருக்கிறார்.தி.மு.க.,வும் தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறதாம்.
ராஜேந்திரசோழன் 1000
கங்கை வரை போர்தொடுத்து வெற்றிகண்டு சோழர்களின் பெருமையைப் பறைசாற்றியதன் நினைவாக பிரகதீஸ்வரர் கோயிலையும், கடல் போன்ற சோழகங்கம் என்ற பொன்னேரியையும் நிர்மாணித்தார் ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன். அவருக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் அவர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரையில், அவர் அரியணை ஏறிய 1,000-ஆவது ஆண்டு விழா நடத்தப்பட்டது.
கோலாகல கொண்டாட்டம்
அஞ்சல் தலை வெளியீடு, ராஜேந்திர சோழனின் வரலாறு கொண்ட குறுந்தகடுகள் வெளியீடு, நாட்டியாஞ்சலி, மாமன்னன் ராஜேந்திர சோழனின் பன்முக சாதனை கருத்தரங்கக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன. அதில் எழுத்தாளர் பாலகுமாரன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, பொறியாளர் கோமகன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், வரலாற்று ஆசிரியர் அரியலூர் தியாகராஜன், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் பங்கெடுத்தனர்.
அஞ்சும் அதிமுக
தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட 1000-ம் ஆண்டு விழாவை வெகுவிமர்சையாக கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டாடினர். அதன் விளைவுதான், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது என்று ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. அந்த வகையில் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விழாவை எடுத்து நடத்தினால் தி.மு.க-வின் நிலை நமக்கும் ஏற்படும் என்று அ.தி.மு.க-வினர் அஞ்சுவதாகப் பலர் கூறுகின்றனர்.
கண்டுகொள்ளாமல் விடலாமா?
கிழக்கு ஆசிய பகுதிகளையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது வேதனை தருவதாக உள்ளது என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள். கரிகாலன், பென்னிக்குயிக் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக முதல்வர், நம் மன்னனுக்கும் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.