தஞ்சையில் திமுகவின் அஞ்சுகத்தை வென்றார் அதிமுகவின் ரங்கசாமி!
தஞ்சையில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார்
தஞ்சை: தஞ்சை தொகுதியில் நவம்பர் 19ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 20 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணப்பட்டன. அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை விட 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து, இந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ரங்கசாமியும் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் போட்டியிட்டனர்.
கடந்த 19ந்தேதி பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் 8 மணியில் இருந்தே வெளியாகத் தொடங்கின. தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமியே முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.