தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலிலும் திமுக, காங். கூட்டணி தொடரும் - திருநாவுக்கரசர்
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நாளில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இந்த தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலின் போது திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போன்றே இந்தத் தேர்தலையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கும் என்று தெரிவித்தார்.
கடந்த முறை நடந்தது போன்று பணப்பட்டுவாடா இல்லாமல் நியாயமாக, நேர்மையாக சுதந்திரமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார். மேலும், கடந்த முறை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் இந்த முறை வெறும் 3 தொகுதிதான் என்பதால் இந்தத் தேர்தலை திறம்பட நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 16ம் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, அந்த 2ம் தொகுதிகளுக்கும் முதலில் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் பின்னர் எதிர்ப்பு வலுக்கவே தேர்தலையே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.