கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டர்.. பிடிவாரண்ட்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராததால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி அருகே உள்ளது வரகூர். இந்த ஊரைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த 9ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட 1-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக சாட்சி கூற வருமாறு நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய புவனேஸ்வரி, போலீஸ்காரராக பணியாற்றிய ராமநாதன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தற்போது திருச்சி மாவட்டம் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். புவனேஸ்வரி தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராகவும், போலீஸ்காரர் ராமநாதன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதனால், குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சாட்சி கூற வரவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி கூற வராத காரணத்திற்காக பழனிமுத்து, புவனேஸ்வரி, ராமநாதன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டது.