தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை : தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தபோவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நேற்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த மருத்துவமனை மூலம் 19 மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சிறப்பான மருத்துவச்சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அமைப்பதற்காக, மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ஈரோடு பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
இறுதியாக பல்வேறு இழுபறிக்குப் பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
விரைவில், இதுதொடர்பாக பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.