தஞ்சாவூர் ஹோட்டலை "சுட்டு" விட்டாரா கே.என். நேரு?
தஞ்சாவூர்: தஞ்சையில் ஒரு ஹோட்டல் மற்றும் விடுதி ஒன்றை முன்னாள் அமைச்சர் கே. என். நேரு அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நேரு மற்றும் 2 பேர் மீது தஞ்சை போலீஸார் நில அபகரிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் விடுதியை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தஞ்சை நில அபகரிப்பு போலீசில் நாகராணி என்பவர் கடந்த 201ம் ஆண்டு புகார் செய்தார்.
அந்தப் புகாரில், கே.என். நேரு, அவரது தம்பி ராமஜெயம், பரணிதரன், ராஜபூபதி ஆகியோர் தனது ஹோட்டலையும், விடுதியையும் அபகரித்து விட்டதாகவும், மீட்டுத் தரக் கோரியும் கூறியிருந்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில் இதுதொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார் நாகராணி.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி தஞ்சை மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டது. ஆனாலும் வழக்கு பதிவு செய்யவில்லை.
இ்தையடுத்து நாகராணி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் அவசரம் அவசரமாக நேரு உள்ளிட்டோர் மீது போலீஸார் நில அபகரிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு விட்டதால் அவரது பெயரை வழக்கில் சேர்க்கவில்லை.