தஞ்சை தொகுதி: தபால் ஓட்டு பெட்டியின் சாவி மாயம்.. வாக்கு எண்ணிக்கை தாமதம்
தஞ்சைத் தொகுதியில் தபால் ஓட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த சாவி மாயமானதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
தஞ்சை: கடந்த 19ம் தேதி நடந்த தஞ்சை தொகுதிக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணுவதற்கு தயாரான போது, தபால் ஓட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த சாவி மாயமானதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தஞ்சை தொகுதியில், மொத்தம் 2 லட்சம் 68 ஆயிரத்து 516 வாக்குகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 389 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதே போல் 30 தபால் ஓட்டுக்கள் இங்கு பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி தொலைந்துவிட்டது. இதனால் தஞ்சைத் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தேடி கண்டுபிடித்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சற்று தாமதமானது.
தஞ்சைத் தொகுதியில் உள்ள மொத்தம் 30 வாக்குகளில் 29 வாக்குகளை அதிமுக வேட்பாளர் ரங்கசாமி பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி ஒரு வாக்கை பெற்றுள்ளார்.