காவிரி: மத்திய அரசுக்கு எதிராக 6-வது நாளாகத் தொடர் போராட்டம் - தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியல்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
Recommended Video
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து 6-வது நாளாகத் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.
நாளுக்கு நாள் மத்திய அரசுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்து வருகிறது. இந்நிலையில், 6-வது நாளான இன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரபோஜி கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று முழக்கம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததை அடுத்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.