தமிழகத் தண்ணீரைக் கேரளாவுக்குக் கடத்திய லாரி பறிமுதல்... வாளையாறில் மடக்கிய அதிகாரிகள்!
தமிழகத்தில் இருந்து லாரி மூலம் தண்ணீரைக் கேரளாவுக்குக் கடத்திச் சென்றவரை வாளையாறு செக்போஸ்டில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்த விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:தமிழகப் பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு தண்ணீரைக் கடத்திச் சென்ற டேங்கர் லாரியை வாளையாறு செக் போஸ்டில் வணிக வரித்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.உரிய விசாரணைக்கு பிறகு அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது.இங்கு வழக்கம்போல வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக டேங்கர் லாரியை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாகச் சென்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்த டேங்கர் லாரியை துரத்திச் சென்று மடக்கினர்.சந்திபுரம் சோதனைச் சாவடியில் அதிரடியாக மடக்கிப்பிடித்த அதிகாரிகள் லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் அந்த லாரியை வாளையாறு சோதனைச் சாவடிக்குக் கொண்டுவந்தும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.டேங்கர் லாரியில் தண்ணீர் லோடு இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
லாரியில் தண்ணீர் கடத்தல்
வணிக வரித்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுநரிடம் மேற்கொண்ட அதிரடி விசாரணையில்,லாரி டிரைவர் எந்தவிதமான ஆவணமும் இல்லாமல் ஒட்டிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அதிகாரிகள் அந்த லாரியையும், ஓட்டுநரையும் க.க.சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்தைச் சேர்ந்த டிரைவர்
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சேலம், மேட்டூர் சாலை ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஆர்.கண்ணன் என்பவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது.அவர் அடிக்கடி இதே போல தண்ணீர் கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக விலைக்கு விற்க தண்ணீர் கடத்தல்
இது குறித்து ராமமூர்த்தி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்," கேரள மாநிலத்தில் இருந்து மேட்டூருக்கு ரிட்டன் வாடகை கிடைத்தது.அதனால் போகும் வழியில், ஈரோட்டில் உள்ள வாட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்து குறைந்த விலைக்குத் தண்ணீர் வாங்கினேன்.அதை திருச்சூரில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு தண்ணீரை அதிக விலைக்கு விற்பதற்காகக் கொண்டு சென்றேன்.ஆனால் இடையில் சிக்கிக்கொண்டேன்." என்று தெரிவித்துள்ளார்.
எச்சரித்த போலீசார்
இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று க.க.சாவடி போலீஸார் லாரி ஓட்டுனரை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.தமிழகத்தில் இருந்து தண்ணீரைக் கேரளாவுக்கு கடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதிகரிக்கும் தண்ணீர் கடத்தல்
தமிழகத்தின் எல்லை மாவட்டமான கோவை மற்றும் அதன் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஆயில் கொண்டு செல்வது போல மிக நுட்பமாக, கேரளாவுக்கு தண்ணீர் கடத்திச் செல்வது நடந்து வருகிறது.இதனை சில நேரங்களில்தான் சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடிக்கிறார்கள். தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் ,வேளையில் இது போல டேங்கர் லாரிகளில் தண்ணீர் கடத்தல் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.