மெரீனா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதி பள்ளி மாணவர் மரணம்
சென்னை கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்துள்ளார்.
சென்னை: மெரீனா கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை செனாய் நகர் வெங்கடாசலபதி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விஜய், 18. இவர், தற்போது நடந்த பிளஸ் 2 பொது தேர்வு எழுதியுள்ளார். செனாய்நகர் அப்பாராவ் கார்டன் பகுதியை சேர்ந்த கோகுல்நாத், நண்பர்களான இருவரும், புதன்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
கடற்கரையில் விளையாடிவிட்டு இருவரும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். பைக் மெரினா காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது துறைமுகத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி பாமாயில் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராதவிதமாக விஜய் சென்ற பைக் மீது மோதியது.
இதில், விஜய் மற்றும் கோகுல்நாத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயமடைந்த இரண்டு மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் நேற்று உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரை கைது செய்து உள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் தண்ணீர் லாரி மோதி ப்ளஸ் ஒன் மாணவர் உயிரிழந்தார், டேங்கர் லாரிகள் படுவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கு எமனாகி வருகின்றன.