ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், காக்க போராடினால் நானும் வருவேன்.. மதுரையிலிருந்து தருண் விஜய்
மதுரை: தமிழ் கலாசாரத்தோடு ஒன்றியுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் பேசிய அவர், "திருவள்ளுவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்காக திருக்குறள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், ஜாதி, மத பேதமற்ற ஒற்றுமைக்கும் உலகிற்கே திருவள்ளுவர் வழிகாட்டியுள்ளார்.
அவருக்கு நாடாளுமன்றத்தில் திருவுருவச்சிலை நிறுவச் செய்வதுதான் எனது முதல் வேலை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு தமிழக மக்களும், தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழ் கலாசாரத்தோடு ஒன்றியுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதைக் காக்கவும், நடத்தவும் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றாக போராட வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால் அதற்கு எனது முழு ஆதரவை தெரிவிப்பேன்" என்றார்.