தேர்தல் திருவிழா... 43 நாட்களில் ரூ. 4000 கோடி மது விற்பனை... ‘குடி’மகன்கள் சாதனை!
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 43 நாட்களில் மட்டும் ரூ. 4 000 கோடி மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியது.
பிரச்சார நாட்களில் வாக்கு கேட்டு உடன் வரும் கட்சித் தொண்டர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள 6,800 டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 70 கோடி மதிப்பிலான பீர் மற்றும் மதுவகைகள் விற்பனையாகின.
ஏப்ரல், மேயிலே...
ஏப்ரல் மாதம் மட்டும் 29.66 லட்சம் பெட்டிகள் பீர் பாட்டில்களும், 47.50 லட்சம் பெட்டிகள் மது வகைகளும் விற்பனையாகின. இந்த விற்பனையானது மே மாதத்தில், 13ம் தேதி வரை, 18.20 லட்சம் பெட்டிகள் பீர், 20.70 லட்சம் பெட்டிகள் மது வகைகள் எனத் தெரிய வந்துள்ளது.
4000 கோடி...
ஒரு பெட்டி பீர் விலை சராசரியாக, 1,440 ரூபாய்; ஒரு பெட்டி மது விலை, 4,800 ரூபாய் என உள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் மே 13ம் தேதி வரை சுமார் 47.86 லட்சம் பெட்டி பீர்; 68.20 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகி உள்ளன; இதன் மதிப்பு, 3,962.78 கோடி ரூபாய் ஆகும்.
தேர்தல் திருவிழா...
வழக்கமாக கோடை காலங்களில் மது வகைகளை விட பீர் விற்பனை தான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றதால் மது விற்பனையும் அதிகமாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
டாஸ்மாக் விடுமுறை...
இதற்கிடையே, இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி கடந்த சனிக்கிழமை முதலே மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இதனால், மே, 12, 13ல், மது விற்பனை வழக்கத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக இருந்ததாக டாஸ்மாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
330 கோடி...
மே, 12ம் தேதி 130 கோடி ரூபாயும், மே, 13ல், 200 கோடி ரூபாயும் என, இரு தினங்களில் மட்டும், 330 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது வகைகள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.