தொடரும் தாக்குதல்கள்... சென்னை, திருவள்ளூரில் இன்று "டாஸ்மாக்" கடைகளை அடைக்க 6 சங்கங்கள் முடிவு
சென்னை : தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் பாதுகாப்பு கேட்டு இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க 6 சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
சென்னை தியாகராயர் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை மீது நேற்று மாலை (புதன்கிழமை) மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் டாஸ்மாக் ஊழியர் பழனி என்பவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து சென்னை, திருவள்ளூரில் டாஸ்மாக் கூட்டமைப்பினர் இன்று (வியாழக்கிழமை) கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும் அச்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6 டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் டாஸ்மாக் கடையடைப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனிடையே சென்னை தியாகராயநகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.