"கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்..கிழவனைத் தூக்கி மனையில் வை"...நியூ இயர் டாஸ்மாக் இலக்கு ரூ200 கோடி
புத்தாண்டுக்கு ரூ200 கோடிக்கு மதுவிற்பனை இருக்க வேண்டும் என டாஸ்மாக்குக்கு ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனராம்.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிவைத் தொடர்ந்து அதிமுகவில் பூகம்பம் வெடிக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத தமிழக ஆட்சியாளர்கள் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் வருவாய் ரூ200 கோடி என இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளனராம்.
தமிழக அரசின் ஒரே வருவாயாக இருப்பது தற்போது டாஸ்மாக் மட்டுமே. ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில் புதிய திட்டங்கள், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் எதுவுமே கண்ணுக்கு எட்டிய தொலைவு இல்லை.
ஆனால் ஆதாயம் தரக் கூடிய டெண்டர் பணிகள் மட்டுமே அமோகமாக நடக்கின்றன என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. அத்துடன் ஒவ்வொரு பண்டிக்கைக்கும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அந்த வருவாயை வைத்து ஆட்சி நிர்வாகத்தை ஓட்ட நினைக்கிறது தமிழக அரசு.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எத்தனை தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் "கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்..கிழவனைத் தூக்கி மனையில் வை" என்கிற கதையாக புத்தாண்டு நாளில் டாஸ்மாக் விற்பனையை ரூ200 கோடிக்கு நிர்ணயித்துள்ளனராம். சரக்குகளால் இந்த இலக்கு எட்டப்படுமா? இல்லை சறுக்குமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.