அரசு மதுபான கடையில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தல்.. கார் பறிமுதல்.. ஒருவர் கைது
டாஸ்மாக்கில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கோட்டை:அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில்கள் கடத்தப்பட்டதில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வல்லம் ரோட்டில் அரசு மதுபானக் கடை
ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்தக் கடையை அடைக்கும் போது சிலர் மொத்தமாக மதுப் பாட்டில்களை வாங்குவதாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல் துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, வழக்கறிஞர் என்ற அடையாள சின்னமிட்ட ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருவதை பார்த்த போலீசார் அதனை மறித்துள்ளனர். இதனை சற்று எதிர்பார்க்காத காரில் வந்த இருவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து காரை சோதனையிட்ட போலீசார் காரினுள் இருந்த மனோஜ் குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் காரில் 97 குவார்ட்டர் பாட்டில்களை பிரானூர் பார்டரில் உள்ள தனியார் பாருக்கு வாங்கி செல்வதாக மனோஜ் குமார் தெரிவித்தார். மேலும், காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தனியார் பார் நடத்தி வரும் செங்கோட்டையை சார்ந்த சேகர் என்பதும், மற்றொருவர் கரிசல் குடியிருப்பு முருகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மதுப்பாட்டில்களையும்,காரையும் பறிமுதல் செய்த போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.