திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு நோட்டீஸ்
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு உரிய விளக்கம் கேட்டு டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
திருப்பூர் இராயபுரம் பகுதியில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, பள்ளி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை புகை பிடித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர், பள்ளி மைதானம் அருகே செவ்வாய்க்கிழமை மது அருந்தியது தொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் இருவர், 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் என ஐந்து பேர் சிக்கினர்.
இதுகுறித்து விசாரணைக்குப் பிறகு, மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர தலைமையாசிரியர் கூறியுள்ளார். அனால், மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவில்லை. மேலும், பெற்றோர்களின் செல்போன் எண்ணை கேட்டபோது, மாணவர்கள் ஐந்து பேருமே தவறான எண்களை கொடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி முருகன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 5 பேரை 10 நாட்கள் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு இந்திய மாணவர் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், மாணவர்களுக்கு மது விற்பனை செய்தது தொடர்பாக திருப்பூர் பெரியார் காலனியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்பட மூவருக்கு டாஸ்மாக் நிர்வாகம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முத்துவடிவேல் செய்தியாளர்களிடம் கூறினார், மாணவர்களுக்கு மது விற்பனை செய்தது தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும், போலீசார் மூலமாக எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திருப்பூர், பெரியார் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் அக்கடையின் மேற்பார்வையாளர் செந்தில்குமார் அங்கு இல்லை. விற்பனையாளர் தினேஷ்குமார், உதவி விற்பனையாளர் மதன்குமார் இருவரும் இருந்துள்ளனர். இருப்பினும், இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார். அவர்கள் அளிக்கும் விளக்கம், விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.