தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை உடைத்து நொறுக்கி கொந்தளிக்கும் பெண்கள்... அதிமுகவின் ஓராண்டு ஸ்பெஷல்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மதுவிலக்குக்கான போராட்டங்கள்தான் அதிமுக செய்த ஓராண்டு சாதனை என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் பட்டியலிடுகின்றனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களும், அதில் ஈடுபட்ட பெண்களை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்களுமே அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகளாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது மதுக்கடைகள். பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. இவ்வளவு ஏன் பெரும்பாலான விபத்துகளுக்கும், அதில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இந்த மதுதான் காரணம்.
இந்த மதுபான பிரச்சினை என்பது தனிப்பட்ட பிரச்சினை என்பது போய் தற்போது சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் தாய்மார்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா வாக்குறுதி
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்திருந்தாலும் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2014-இல் ஜெயலலிதா பெங்களூர் சிறை சென்ற விவகாரத்தை கடந்த 2016-இல் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. அப்போது மதுவிலக்கு பிரச்சினை தலைவிரித்தாடியது. இதைத் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தான் ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் வேலையாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அளித்தார்.
சொன்னதை செய்வார்
ஜெயலலிதா சொன்னதை செய்வார் என்று நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்து இரண்டாவது முறையாக அவரை ஆட்சி பீடத்தில் ஏற்றினர். எனினும் காலத்தின் கோலம் அவர் காலனின் பிடியில் சிக்க நேரிட்டு பொறுப்பேற்ற 4 மாதங்களில் காலமாகிவிட்டார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே விபத்துகள், சமூக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகற்ற உத்தரவிட்டது. இதனால் தங்களது வருவாய் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்தபோதிலும் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் 3,500 கடைகள் மூடப்பட்டன.
வேலையிழந்த ஊழியர்கள்
இந்த அதிரடி அறிவிப்பால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேலை இழந்தனர். இதனால் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ஊருக்குள் கடை தொடங்க ஆயத்தமாகினர். விடுவார்களா மக்கள். ஒன்றன் பின் ஒன்றாக டாஸ்மாக்குக்கு மக்கள் எதிர்ப்பு பலமாக இருந்தது. வீட்டு மின் இணைப்பு வாங்க மாதக் கணக்கில் மக்கள் காத்திருந்த போதிலும், இதுபோன்ற புதிதாக ஊருக்குள் அமையும் மதுபானக் கடைகளுக்கு மின் இணைப்பு, தண்ணீர் கனெக்ஷன் என அனைத்தும் ஒரு நாளிலேயே கிடைத்துவிட்டது.
பொங்கிய பெண்கள்
குடிக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் மனைவியையும், பிஞ்சு குழந்தைகளையும் விட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றன. இதனால் தமிழகம் முழுவதிலும் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் இளம் விதவைகளை காணமுடியும். இதுஒருபுறம் இருந்தாலும் இவர்கள் குடித்துவிட்டு அடிக்கும் லூட்டி இருக்கே. அய்யய்யோ, இந்த நிலை தங்களுக்கும் வரக் கூடாது என்று நினைத்த பெண்களே துணிந்து புதிதாக அமைக்கும் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினர். டாஸ்மாக் கடைகளால் தமிழக அரசுக்கு கிடைத்த வருமானத்தை காட்டிலும் இவர்கள் அடித்து நொறுங்கிய பாட்டில்களின் ஏற்பட்ட இழப்பு அதிகமாக இருக்கும் அளவுக்கு பெண்கள் விஸ்வரூபம் எடுத்தனர்.
அதிமுக அரசின் ஓராண்டு சாதனை
புதிதாக அமைக்கப்படும் மதுபானக் கடைகள், ஏற்கெனவே உள்ள மதுக்கடைகள் ஆகியவற்றை நீக்க கோரி பொதுமக்கள் அன்றாடம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அரசு இந்த பிரச்சினையை தீர்க்க முனைப்பு காட்டவில்லை. திருப்பூரில் போராட்டம் நடத்திய பெண்களை ஏடிஎஸ்பி ஒருவர் கன்னத்தில் அறைந்து அராஜகம் செய்தார். இதையும் தமிழக அரசு கண்டிக்கவில்லை. மேலும் ஆம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை பெண் காவலர்களும், ஆண் காவலர்களும் அடித்தனர். இதையும் அரசு கண்டிக்காமல் எந்த நேரத்தில் யார் புது கோஷ்டியை ஆரம்பித்து விடுவார்களோே, நமது காலை வார்ரி விடுவார்களோ என்ற பயத்திலேயே உள்ளது. இன்றுடன் அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் மதுவிலக்குகான போராட்டங்களும், காவல்துறை அடக்குமுறையும், குடிநீர் பிரச்சினையும் தான் சாதனை என்று பொதுமக்கள் பட்டியலிடுகின்றனர்.