டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றமில்லை... ‘குடி’மகன்கள் நிம்மதி!
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை தமிழக அரசு குறைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
காந்தியவாதி சசிபெருமாள், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றதும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
வழக்கமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 வரைத் திறந்திருக்கும். ஆனால், படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தும் நோக்கில் டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தை அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாக இன்று சமூக வலைதளப் பக்கங்களில் செய்தி பரவியது.
அதன்படி, இனி மதியம் 2மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள், இரவு 10 மணிக்கு மூடப்பட்டு விடும் எனக் கூறப்பட்டது. நாளை முதல் இந்த புதிய நேரப்படி மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.
இதனைக் கேட்டு ‘குடி'மகன்கள் பெரிதும் கவலை அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தொடர்புடைய துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
விரைவில் இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேர அளவு குறைப்பு தகவல் வதந்தி தான் என்ற தகவலால் ‘குடி'மகன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.