தொடங்கியது சபரிமலை சீசன் - காற்று வாங்கும் டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் 6798 டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 227 மதுக்கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென விற்பனையாளர்களுக்கு மண்டல மேலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் சரக்குகள் விலை இரட்டிப்பு ஆகிவிட்டது. கூலி தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தி வந்த சரக்குகள் விலை உயர்த்தப்பட்டதால் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு அது பாதியாக சரிந்தது. இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறந்ததால் பெரும்பாலானோர் சபரிமலை செல்ல மாலை அணிந்து விட்டனர்.
இதனால் அவர்கள் 41 நாட்கள் சுத்த விரதத்தில் இருப்பார்கள். அந்த கால கட்டத்தில் மது, புகையை நினைக்க கூட பார்க்க கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் டாஸ்மாக் விற்பனையில் சரிவு ஏற்படும். இந்த காரணத்தால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் 40 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், "ஆண்டுதோறும் கார்த்திகை மாதங்களில் விற்பனை குறைவது வழக்கம்தான். ஆனால் தற்போது மதுபானங்களில் அதிரடி விலை ஏற்றத்தால் விலை குறைந்த சரக்குகள் வருவதில்லை.
இதனால் பல கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. விற்பனை குறைந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மிரட்டல் விடுத்து வருகிறது. இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை" என்று தெரிவிக்கின்றனர்.