கோத்தகிரி அருகே மதுபான கடை சூறை... 50 பேர் கைது
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டதை அடுத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னூர்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் எம்.கைக்காட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளால் அங்கு வாகன ஓட்டிகள் குடித்து விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
இதனால் வேலையிழந்த டாஸ்மாக் ஊழியர்கள் ஊருக்குள் கடை வைக்க முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவ்வாறு மீறி கடை வைத்தாலும் பெண்களே அந்தக் கடைகளை துவம்சம் செய்துவிடுகின்றன.
பூட்டப்பட்ட கடைகளையும் உடைத்து பாட்டில்களை தெருவில் போட்டு உடைப்பதால் சாராயம் ஆறாக ஓடுகிறது. அந்த வகையில் கோத்தகிரியில் உள்ள எம்.கைகாட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும் அதை அகற்றவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் அந்தக் கடையை சூறையாடினர். அதிலிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை உடைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் 50 பேரை கைது செய்தனர்.