3 நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் முட்டி மோதி மது வாங்கிய 'குடி'மகன்கள்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்பதால் அந்த கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
ஆர்.கே. நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியில் இருந்து நாளை நள்ளிரவு 12 மணி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் வாக்குகள் எண்ணப்படும் 30ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி நேற்று மாலை 5 மணி வரை அந்த கடைகளில் ஆண்களின் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுவை பலர் வாங்கிச் சென்றனர். மாலை 5 மணிக்கு கடைகள் மூடப்பட்டபோது பலர் ஏம்ப்பா கடையை அதற்குள் மூடுகிறார்கள் என்று புலம்பினர்.
சென்னையில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரத்தில் பலர் ஓடி வந்து மதுபாட்டில்களை அவசர அவசரமாக வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று வியாபாரம் அமோகமாக இருந்தது.
கடைகள் மூடப்பட்ட பிறகு சில இடங்களில் குடிபோதையில் சிலர் கதவை தட்டிக் கொண்டே நின்றனர்.