500 டாஸ்மாக் கடைகள் மூடல் .. 5000 ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்!
நெல்லை: தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 5 ஆயிரம் ஊழியர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஜூன் 25ம் தேதியில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை அடைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த கடைகளில் வேலை பார்த்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 2500 பேர் வேலை இழந்தனர். இவர்களில் சிலர் அருகில் உள்ள கடைகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் பெரும்பாலானோர் எந்த கடைக்கும் வேலைக்கு செல்லாமல் மாதந்தோறும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் கையெழுத்திட்டு சம்பளம் மட்டும் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் 168 பார்கள் மூடப்படும் என்றும் தெரிவித்தரர்.
இதன் கீழ் நெல்லை மாவட்டத்தில் 20 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பணிபுரிந்த 120 ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதில் பணிபுரிந்த 5000 பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்கள் அச்சு துறையில் மாற்று பணி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அங்கோ அரசு தேர்வை எழுதி விட்டு ஏராளமானோர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதனால் அரசுக்கு வீண் பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. இதை சமாளிக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதும் தெரியவில்லை.