பிப்.3ல் வள்ளலார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்
சென்னை: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பிப்ரவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 3-ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வள்ளலார் நினைவுதினம்
பிப்ரவரி 3ஆம் தேதியான தை பூச தினத்தன்று வடலூரில் ராமலிங்க அடிகள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் வடலூரில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதனைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்கு வருவது வழக்கம்.
நடவடிக்கை
அன்றைய தினம் தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்கள் எதுவும் செயல்படக்கூடாது. இந்த நாளில் மதுபானங்கள் விற்றல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
சம்பளத்துடன் விடுமுறை
காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்களுக்கு மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.