மக்கள் ஆவேசத்தில் சிக்கி பொசுங்கிய டாஸ்மாக் மதுக் கடை.. தாம்பரத்தில்!
சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுக்கடைக்கு பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர்.
சென்னை: சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் அகற்றாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அக்கடையை தீவைத்து கொளுத்தினர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன என்று காரணம் காட்டி நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தமிழகம் நெடுஞ்சாலையில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி ஊழியர்கள் வேலையிழந்ததால், ஊருக்குள் கடையை திறக்க இடம் தேடி வந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை கண்டித்து ஆங்காங்கே போராட்டம், மறியல் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் கடைகளை பெண்களே அடித்து நொறுக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் தாம்பரம் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். எனினும் மூடாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் அக்கடைக்கு இன்று தீவைத்து கொளுத்தினர். கடையானது முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.