இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகள் மூடல்... அரசுக்கு 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனால் தமிழக அரசுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சென்னை: தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியுள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய நிதி ஆதாரமாக இருந்த டாஸ்மாக் நிறுவனத்தின் 50 சதவிதக் கடைகள் மூடப்பட்டதால், தமிழக அரசுக்கு 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால், அக்கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதிக்கான பேரவையின் தலைவர் கே. பாலு வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ் கேகர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, விபத்துக்களைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் உள்ள உடனே டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை தமிழக அரசே நடத்துவதால்,கடைகளை அகற்ற கால அவகாசம் கொடுக்க முடியாது. உடனே மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாக, 3321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மொத்தம், 6323 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. அவற்றில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 3321 கடைகள் மூடப்பட்டு விட்டன. அதுமட்டுமில்லாமல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிககியில் கூறியது போல் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி கே பழனிச்சாமி 500 கடைகளை மூட உத்தரவிட்டார். ஆக, மொத்தம் 4321 கடைகள் மூடப்பட்டுவிட்டன.
டாஸ்மாக் மூலம், தினம் அரசுக்கு 65 கோடி ரூபாய் வசூலாகி வந்தது. வருடத்திற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி வந்தது. தமிழகத்தின் பிரதான வருமான ஆதாரமாக டாஸ்மாக் வருமானமே இருந்து வந்தது. இந்நிலையில், தொடர்ந்து, 4321 கடைகள் மூடப்பட்டதால், 11 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் நிதி ஆதாரமான டாஸ்மாக்கின் வருமானம் குறைந்தால், என்ன செய்வது, மாற்று வருமான வழிகள் என்ன குறித்தெல்லாம் தற்போதைய தமிழக அரசு திட்டமிடாத காரணத்தால், எதிர்வரும் நாட்களில் அரசை நடத்துவதும் நலப்பணிகளை நிரைவேற்றுவதும் பெரும் கேள்விக்குறியாக அமையும் என அஞ்சப்படுகிறது.