10 ரூபாய் நாணயத்துடன் வந்த தொழிலாளி.. வாங்க மறுத்த டாஸ்மாக்.. உதவிக்கு ஓடி வந்த போலீஸ்!
10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
நாகர்கோவில்: 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று புரளி கிளம்பி உள்ளதால் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுத்து வருவதால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் வங்கிகளுக்கு தொடர்ந்து படை எடுத்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சில்லரை தட்டுபாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என புரளி கிளம்பி உள்ளதால் வியாபாரிகள் அதை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் பொது மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கி வருகிறது.
10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்ற ருசிகர சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. நாகர் கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளி இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார். தனக்கு விருப்பமான மது பானத்தை கேட்ட அவர் அதற்குரிய பணத்தை 50 நோட்டு ஒன்று மற்றும் ஐந்து 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். ஆனால் கடை ஊழியர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தார். நாணயங்களுக்கு பதில் ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி கடை ஊழியருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் கடைசி வரை நாணயத்தை வாங்க முடியாது என்று டாஸ்மாக் கடை ஊழியர் கறாராக கூறி விட்டார். இதைதொடர்ந்து அந்த தொழிலாளி நேராக 10 ரூபாய் நாணயங்களுடன் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு நடையை கட்டினார். 10 ரூபாய் நாணயத்தால் தனக்கு மது வழங்க மறுத்ததை எடுத்து கூறி நியாயம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டார். உடனே காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவலர் அந்த தொழிலாளியை அழைத்துக்கொண்டு டாஸ்மாக்கடைக்கு சென்றார். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று எடுத்துக்கூறினார். இதைதொடர்ந்து டாஸ்மாக்கில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொண்டு அவர் கேட்ட மது பாட்டிலை கொடுத்தனர்.