எங்களுக்கு வேறு வேலை கொடுங்க, மது விலக்கை அமல்படுத்துங்க... டாஸ்மாக் ஊழியர்கள்
சென்னை: மற்றவர்களைப் போலவே பூரண மதுவிலக்கு வந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்களும். ஆனால், தங்களுக்கு அரசின் மற்றத் துறையில் வேலை வாய்ப்பு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் டவரில் ஏறிப் போராடிய போது, காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டங்கள் வலுத்துள்ளது.
ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப் பட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்துவதாக உறுதி அளித்தால் மட்டுமே சசிபெருமாளின் உடலைப் பெறுவோம் என அவரது குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தாங்களும் பூரண மதுவிலக்கையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர் டாஸ்மாக் ஊழியர்கள்.
சமூக அக்கறையும் உண்டு...
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனப் பொதுச் செயலாளர் திருசெல்வம் கூறுகையில், "தொழிற்சங்கம் என்பது ஊழியர்களின் நலன் குறித்ததாக மட்டும் சிந்திக்க வேண்டிய ஒன்றல்ல. சமூக அக்கறையும் அதற்கு உண்டு. அந்தவகையில், மதுவால் சமுதாயத்தில் சீரழிவு ஏற்பட்டுள்ளது மறுக்க முடியாத உண்மை.
ஒரு நாளில் சாத்தியமல்ல...
ஆனால், பூரண மதுவிலக்கு என்பது ஓர் நாள் இரவில் சாத்தியமாகின்ற விசயமில்லை. அதில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வாழ்வும் அடங்கியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
பார்களை மூடலாம்...
மேலும், அதிக எண்ணிக்கையிலான கடைகள் இருப்பதால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகவே காணப்படுகிறது. முதல் கட்டமாக டாஸ்மாக் கடைகளோடு இணைந்துள்ள மது அருந்தும் பார்களுக்கு அரசு தடை விதிக்கலாம். இதன் மூலம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
டாஸ்மாக் நேரத்தை குறைக்கலாம்...
ஏனெனில் பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ குடிக்க இயலாது என்பதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். அதேபோல், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தினையும் அரசு குறைக்க வேண்டும்' என திருச்செல்வன் கூறுகிறார்.
நிர்பந்தத்தத்தால் வேலை...
இதேபோல், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கப் பொருளாளர் நக்கீரன் இளங்கோவன் கூறுகையில், "டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் குடும்பம் உள்ளிட்ட நிர்ப்பந்தங்களாலேயே இந்த வேலையில் நீடித்து வருகின்றனர். இந்த வேலை மோசமான ஒன்று தான் என்பது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தெரியும்.
சலுகைகளும் இல்லை...
இது பணப்பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வேலையாக மட்டுமே உள்ளது, ஊழியர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மற்ற அரசு ஊழியர்களுக்கான எந்த வித சலுகையும் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை' என்கிறார்.
28 ஆயிரம் ஊழியர்கள்...
தமிழகத்தில் மட்டும் சுமார் 6800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 28 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.