வரி நிர்ணயம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் கைது
ஈரோடு: ஈரோட்டில் வரி நிர்ணயம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மாநகராட்சி வரி வசூல் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 1 ஆவது பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் தனது புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உள்ள வரி வசூல் அலுவலர் மணிகண்டன் என்பவரை சந்தித்துள்ளார்.
தினேஷ்குமார் தனது வீட்டுக்கான வரைபடம், அனுமதிச்சன்று, உள்ளிட்டவற்றை தந்தும், வரிவிதிக்க காலதாமதம் ஏற்படுத்தி வந்துள்ளார் மணிகண்டன். இதற்கான காரணம் கேட்டபோது தனக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.
தினேஷ்குமார் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் பணத்தை தயார வைத்திருந்த தினேஷ்குமார் மணிகண்டனுக்கு போன் செய்து பணம் தயாராக உள்ளதாக கூறியுள்ளளார்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு பணத்துடன் வருமாறு மணிகண்டன் நேற்று காலை கூறியுள்ளார். இலஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை தினேஷ்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். குறிப்பிட்ட இடத்தில், தினேஷ்குமாரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரத்தை மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி புஷ்பராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டனிடம் விசாரணை நடந்தது. அதன் பின் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகத் திடமும் விசாரணை செய்தனர். பின்னர் இது தொடர்பாக அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து, சிலவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணை மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் ஈரோடு கிளைச்சிறையில்மணிகண்டனை அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் காசிபாளையம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் முன்பு பணியாற்றினார், அங்கிருந்து சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில் மணிகண்டன் பொறுப்பேற்று 10 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.